சென்னையில் அதிகமாக காய்ச்சல் பரவிவரும் நிலையில், 50% பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா – ஏ வகை வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னையில் பரவலாக காய்ச்சல், இருமல் என்பது பரவி வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகின்றன. தொடந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் பரவி வந்த காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருந்தது. இது குறித்து ஆய்வு ஒன்றை பொதுசுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்டது. அதன்படி, பாதிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகளை சோதனை செய்யப்பட்டதில், சென்னையில் பரவிவரும் காய்ச்சல் இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை வைரஸ் தொற்று என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதே போல் நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆஎஸ்வி வைரஸ் தொற்றும் பரவலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரிசோதனை முடிவில் சென்னையில் தற்போது கொரோனா பாதிப்போ அல்லது பன்றிக் காய்ச்சல் பாதிப்போ பரவலாக இல்லை என்றும் அதேவேளையில் இன்ஃப்ளூயன்ஸா வகை தொற்று 50 சதவீதம் பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்எஸ்வி எனப்படும் நுரையீரல் வைரஸ் தாக்க பாதிப்பு 37.5 சதவீதம் பேருக்கு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.