ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதலமைச்சர், போட்டோஷூட் மேடை போட்டு -அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார், அஇஅதிமுக-வைப் பற்றியே புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில், இன்று திருப்பத்தூரில் பேசியுள்ள பொம்மை முதலமைச்சர், “அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்துவிட்டது” என்கிறார்.
அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கும், திமுக-வுக்கும் கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா? “அண்ணா- இதய மன்னா” என்று கண்ணீர் வடித்த கையோடு அவர் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து, அண்ணாவின் கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்து, குடும்பக் கொள்ளையின் கூடாரமாக திமுக-வை கருணாநிதி மாற்றியதன் விளைவாக, அண்ணாவின் கொள்கை விழுமியங்களை நெஞ்சில் ஏந்திய அவரின் இதயக்கனி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்ட இயக்கம்அ
அதிமுக ஒருநாள், ஒரு நொடி கூட, எங்கள் பெயரிலும், கொடியிலும் மட்டுமல்ல, எங்கள் குருதியிலும் குடியிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களை விட்டுக்கொடுக்க மாட்டோம். அண்ணாவின் கொள்கைகளுக்கு மாறாக, குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை!
இன்று வானத்திற்கும் பூமிக்கும் முழங்கும் ஸ்டாலினுக்கு, 1999- 2004 காலத்தில், மத்தியில் பதவி சுகத்தை அனுபவிக்கும் போதெல்லாம் தெரியாதா? யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்? கச்சத்தீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டை, அதன் உரிமைகளை அடகு வைத்ததும், வைக்கத் துணிவதும் திமுக தான்!
தன்மானமிக்க தமிழ்நாட்டு மக்கள், பகல்வேஷக் கட்சியான திமுக-வை 2026ல் நிச்சயம் விரட்டியடிப்பார்கள்! திமுக-வால் பறிபோன தமிழ்நாட்டின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் நான் மீட்டுத் தருவேன்! இதுவே, தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கும் 2026 தேர்தலுக்கான அதிமுகவின் முதல் வாக்குறுதி!” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இன்று அரசு விழா ஒன்றில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “ மதத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்று பார்த்தால், அங்கேயும் திமுக ஸ்கோர் பண்ணிட்டாங்களே என்று பார்க்கின்றனர்.. ஏதாவது ஒரு குழப்பத்தை ஏற்படுத்த படாத பாடு படுகின்றனர். மீண்டும் சொல்கின்றேன்.. இது பெரியார், அண்ணா, கலைஞரால் வளர்க்கப்பட்ட மண்.. இப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறீர்கள்.. அதை கைதட்டி வேடிக்கை பார்ப்பது அண்ணா பெயரில் கட்சி நடத்தும் கூட்டம்.. அண்ணா பெயரையே அவர்கள் அடமானம் வைத்து விட்டனர். இன்றைக்கு கட்சியை அடமானம் வைத்தவர்கள் நாளை தமிழ்நாட்டை அடமானம் வைக்க நாம் அனுமதிக்க கூடாது..” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : இவர்களின் போலி பக்தி, அரசியல் நாடகத்தை யாரும் ஏற்கமாட்டார்கள்.. பாஜக – அதிமுகவை விளாசிய ஸ்டாலின்..