அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் 11-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் குறையாமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன; மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சி படைகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், போரின் முடிவை ஈரான் தான் தீர்மானிக்கும் என்று ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவுடன் தூதரக பேச்சுவார்த்தைக்கு தற்போது எந்த இடமும் இல்லை என்றும், ஈரான் படை நீண்ட காலப் போருக்குத் தயாராக உள்ளது என்று ஈரான் தெரிவித்துள்ளது..
இதனிடையே உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை ஈரான் நிறுத்தினால் பாதித்தால், போர் மேலும் தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாகவும் டிரம்ப் எச்சரித்தார். ஆனால், ஈரான் புதிய கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட உச்சத் தலைவரைத் தேர்வு செய்தது.
மறைந்த உச்ச தலைவரின் மகனான மோஜ்தபா கமேனியை புதிய உச்சத் தலைவராக தேர்வு செய்த அடுத்த நாளே, எண்ணெய் விலை 2022க்கு பிறகு காணப்பட்ட மிக உயர்ந்த அளவிற்கு தற்காலிகமாக உயர்ந்தது. இதை முதலீட்டாளர்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய போரில் 10 நாட்கள் கடந்தபோதும் ஈரான் தனது நிலைப்பாட்டை கடுமையாகத் தொடரும் சிக்னலாகக் கருதினர்.
ஆனால் பின்னர் எண்ணெய் விலைகள் குறைந்தன; அதே நேரத்தில் அமெரிக்க பங்குச் சந்தை உயர்ந்தது. ஈரானுடன் நடைபெறும் போர் நீண்ட காலம் நீடிக்காமல் இருக்கலாம் என்ற நம்பிக்கையே இதற்கு காரணமாக இருந்தது.
மியாமி அருகே உள்ள தனது கோல்ஃப் கிளப்பில் குடியரசுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேசிய டொனால் டிரம்ப் “நாங்கள் மத்திய கிழக்குக்கு ஒரு சிறிய பயணம் செய்தோம்; சில தீய சக்திகளை அகற்றுவதற்காக. இது குறுகிய கால நடவடிக்கையாக இருக்கும் என்று நீங்கள் விரைவில் காண்பீர்கள்,” என்றார்.
அதற்குப் பிறகு சில மணி நேரங்களில், டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாவது: “ ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் போக்குவரத்தை ஈரான் தடுக்க ஏதாவது செய்தால், இதுவரை கொடுத்த தாக்குதல்களை விட 20 மடங்கு கடுமையாக அமெரிக்கா பதிலடி கொடுக்கும்,” என்று எச்சரித்தார்.
இந்தப் போர் காரணமாக உலக சந்தைக்கு செல்லும் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா முழுவதும் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன.
மேலும், இந்தப் போர் காரணமாக பல வணிக நகரங்களில் இருந்த வெளிநாட்டவர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். பல இடங்களில் இராணுவ தளங்கள், அரசாங்க கட்டிடங்கள், எண்ணெய் மற்றும் நீர் வசதிகள், ஹோட்டல்கள் மற்றும் குறைந்தபட்சம் ஒரு பள்ளி ஆகியவற்றில் குண்டுகள் வீசப்பட்டதால், கோடிக்கணக்கான மக்கள் பாதுகாப்பு தங்குமிடங்களைத் தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக அமெரிக்கா மிரட்டியுள்ள நிலையில், ஈரான் மீது தாக்குதல்கள் தொடர்ந்தால் ஒரு லிட்டர் எண்ணெய்கூட வழங்கப்படாது என்று ஈரான் எச்சரித்துள்ளது. ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கினால் அல்லது மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இலக்குகளை தொடர்ந்து தாக்கினால் இந்த முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையை அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



