அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தன் மீது தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்கும் வகையில் அண்டை நாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு உட்கட்டமைப்புகளை தகர்ப்பதற்கான இலக்குகளை ஈரான் விரிவாக தயாரித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தன. போர் தீவிரமடைந்த நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு மிக முக்கியமான வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. 100 நாட்களை கடந்த போரின் முடிவில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற கப்பல்கள் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமைதி ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஈரானின் முக்கிய ராணுவத் தளங்களைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தின.
போர்நிறுத்தத்திற்கு இணங்க மறுக்கும் ஈரானை வழிக்கு கொண்டு வரவும், பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க அழுத்தம் கொடுக்கவும், அந்நாட்டின் மீது அதிதீவிரத் தாக்குதல் நடத்த ராணுவத்திற்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா தாக்குதலை தொடங்கும் பட்சத்தில் இஸ்ரேலும் அதில் கரம்கோர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஈரானின் எரிசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், மேற்காசிய பிராந்தியம் முழுவதிலும் உள்ள முக்கிய எரிசக்தி உட்கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. இதற்காக சவுதி அரேபியாவின் கவார் எண்ணெய் வயல், தினமும் 70 லட்சம் பீப்பாய்களுக்கு மேல் உற்பத்தி செய்யும் அப்காய்க் மற்றும் குரைஸ் சுத்திகரிப்பு ஆலைகள் ஈரானின் இலக்கில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜகும் எண்ணெய் வயல் மற்றும் தினமும் 10 லட்சம் பீப்பாய்களுக்கு மேல் சுத்திகரிக்கும் ருவேஸ் ஆலையும் இந்த தாக்குதல் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
Read More : 15 வயது சிறுமியை ஊர் ஊராக கூட்டிச் சென்று மாறி மாறி பலாத்காரம்..!! 4 பேர் மீது பாய்ந்தது போக்சோ..!!



