தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.. தினமும் கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது தினசரி நிகழ்வுகளாக மாறிவிட்டன..
இந்த சூழலில் நேற்று கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் கடந்த 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளது.. திருவள்ளூர், அம்பத்தூர், அண்ணாசாலை, பெரம்பூர் உள்ளிட்ட பல இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது.. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ வெள்ளித்திரையைத் தாண்டி வெளியுலகத்திற்கு வாருங்கள் முதல்வர் திரு. தவெக விஜய் அவர்களே! நேற்று ஒருநாளில் மட்டும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குழந்தைகள், பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவி, கர்ப்பிணி பெண், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட 12 பேருக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதும் அதில் 3 வயது குழந்தை அநியாயமாக இறந்து போனதும் பற்றி ஏதாவது உங்களுக்கு தெரியுமா? 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் எனில், உங்கள் ஆட்சியில் சராசரியாக 2 மணி நேரத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு?
இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் உங்களுடன் திரையில் நடித்த நடிகர், நடிகைகளையும், உங்களை வைத்து திரைப்படம் இயக்கிய இயக்குநர்களையும் வரிசையாக சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வது தான் உங்கள் மாற்று அரசியலா முதல்வரே? தினசரி பல சினிமா பிரபலங்களை சந்திக்கும் நீங்கள், உங்கள் ஆட்சியில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை இதுவரை நேரில் சென்று சந்திக்காதது ஏன்? பாதிக்கப்பட்டவர்கள் பனையூருக்கு வந்தால் தான் உங்கள் தரிசனம் கிடைக்குமோ?
முதல்வரான பின்னும் நடிகர் மனநிலையிலேயே தொடரும் உங்கள் பந்தாவிற்கு, எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் எதற்கு பலியாக வேண்டும்? உங்களை நம்பி வாக்களித்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால், பதவி விலகுங்கள் திரு. ஜோசப் விஜய் அவர்களே..” என்று குறிப்பிட்டுள்ளார்..



