கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே முத்துரையைச் சேர்ந்தவர் பிரகாஷ்ரெட்டி(42). தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மனைவி நவீனா(38). இந்தத் தம்பதிக்கு 18 வயதில் மகள் உள்ளார். மதுவுக்கு அடிமையான பிரகாஷ்ரெட்டி, தினமும் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
வழக்கம் போல் ஏப்ரல் நான்காம் தேதி இரவு பிரகாஷ்ரெட்டி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். குடிபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த நவீனா அருகில் கிடந்த உருட்டுக் கட்டையை எடுத்து கணவரின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார் பிரகாஷ்.
அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் ஆனேக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து பிரகாஷ்ரெட்டியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்துத் தகவல் அறிந்த தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார்.
சம்பவம் தொடர்பாக பிரகாஷ்ரெட்டியின் தந்தை நாராயணரெட்டி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நவீனாவைக் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் பிரகாஷ்ரெட்டி மது குடித்துவிட்டு தினமும் நவீனாவை அடித்துத் துன்புறுத்தியதும், இதனால் ஆத்திரத்தில் அவர் பிரகாஷ்ரெட்டியை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Read more: “விஜய் ஒரு சுயநலவாதி.. மேடைகளில் கேப்டன் பெயரை பயன்படுத்திக் கொள்கிறார்..” விளாசிய விஜய பிரபாகரன்..!



