திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், வார இறுதி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவை செயல்படாது என்பதால், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களது சொந்தத் தொகுதிகளுக்குத் திரும்பியுள்ளனர். அதன்படி, அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று மதியம் தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வருகை தந்தார்.
திட்டமிட்டபடி, தூத்துக்குடியில் உள்ள தமது இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர், மாலையில் திருச்செந்தூர் அருகேயுள்ள சேர்ந்தபூமங்கலம் பகுதியில் நடைபெறவிருந்த முகவர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்பதாக இருந்தது. இருப்பினும், விமான நிலையத்தை வந்தடைந்த போதே அவருக்கு லேசான உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதை உறுதி செய்தனர். இரவில் மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்று, காலையில் தொடர் மருத்துவப் பரிசோதனைகளை முடித்த பின்னரே செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.
மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடையே பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : இபிஎஸ்-க்கு எதிராக பாய்ச்சல்..!! எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!



