தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தனது பேருந்துகளை புனரமைக்கவும், புதிய வண்ணங்களை தீட்டவும் முடிவு செய்துள்ளது. இது மட்டுமல்லாமல் புதிதாக பஸ்களை வாங்கவும் முடிவு செய்துள்ளது. தமிழக அரசு நடத்தி வரும் விரைவு போக்குவரத்து கழகம், தமிழக மற்றும் தமிழகத்தை சுற்றியுள்ள மாநிலங்களுக்கான நீண்ட தூர பேருந்து போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகிறது. இப்படியாக நீண்ட தூர பேருந்து போக்குவரத்தை தனியார் நிறுவனங்களும் நடத்தி வருகின்றன. தனியார் நிறுவனங்கள் அதிகமான எண்ணிக்கையில் நடத்தி வருகின்றன.
நீண்ட தூர பேருந்து போக்குவரத்தில் அரசு பேருந்துகளை விட மக்கள் தனியார் பேருந்துகளை அதிகம் விரும்புகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. முதல் காரணம் போதுமான அளவு பேருந்து வசதி இல்லாதது, இருக்கும் பேருந்துகளிலும் போதுமான அளவு சுத்தம் உள்ளிட்ட விஷயங்கள் இல்லாதது, பேருந்துகளின் பராமரிப்பு ஆகியவற்றை சொல்லலாம்
இந்நிலையில் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் உள்ள பேருந்துகளை புனரமைத்து, தனியார் பேருந்துகளுக்கு இணையான அளவில் சேவைகளை வழங்கவும், புதிய பேருந்துகளை வாங்கி செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது. இதற்கான தொடர் நடவடிக்கையிலும் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் இறங்கியுள்ளது.
இது போக தனியாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் தனது பேருந்துகளை புனரமைக்க டெண்டர் விடுக்கப்பட்டது. இந்த டெண்டரின் படி பேருந்துகள் புதுப்பிக்கப்படும் போது அதற்கு புதிதாக மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில்வர் மற்றும் நீல நிறத்தில் இருக்கும் பேருந்துகள் எல்லாம் தற்போது வெளீர் மஞ்சள்- மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. பேருந்துகளின் புகைப்படங்களை டிஎன்எஸ்டிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அரசு வரைவு போக்குவரத்து கழகத்தின் பழைய பேருந்துகளும் புணரமைப்பு செய்யப்பட்டுள்ளன.
இது போக பேருந்துகளின் வேகத்தை அதிகரிக்கவும் மாநிலம் முழுவதும் கால அட்டவணைகளை முறையாக பின்பற்றவும், ஏசி பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மக்களை கவரவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் 200 புதிய பேருந்துகளை வாங்க ஆர்டர்களையும் வெளியிட தயாராகி வருகிறது. இது போக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 450 டவுண் பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த பஸ்களும் புதிய வண்ணத்தில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம்.