விக்கிரவாண்டி தொகுதிக்கு மீண்டும் எப்பொழுது இடைத்தேர்தல் நடைபெறும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. அவருக்கு ஒரு மனைவியும், செல்வகுமார் என்ற மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்தார். பொதுக்கூட்ட மேடையில் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்ததை அடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விழுப்புரம் திமுக தெற்கு மாவட்டச் செயலாளரான புகழேந்தி போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனிடம் தோல்வியை தழுவினார். இதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை தோற்கடித்து வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள இந்த நிலையில் திமுகவில் அனுபவம் மிக்க அரசியல்வாதியான அவரது இறப்பு கட்சிக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல விக்கிரவாண்டி தொகுதிக்கு மீண்டும் எப்பொழுது இடைத்தேர்தல் நடைபெறும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.