திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கொடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவர்
பெருந்தொழுவில் 10 ஆண்டுகளாக பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று, திருப்பூரை சேர்ந்த அஸ்வின், பூவலிங்கம், தினேஷ்குமார் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த சக்தி கணேஷ் ஆகியோர் சதீஷின் பேக்கரிக்கு மது போதையில் வந்துள்ளனர். அங்கு 4 பேரும் பானி பூரி ஆர்டர் செய்து சாப்பிட்டு உள்ளனர். பானிபூரியில் உப்பு இல்லை எனக்கூறி பேக்கரி உரிமையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், பானிபூரி தட்டை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் திரும்பி வந்த அவர்கள் காலி மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி பேக்கரி மீது வீசி உள்ளனர்.
பெட்ரோல் குண்டு வெடிக்காத நிலையில், அங்கிருந்து 4 பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இது தொடர்பாக, சதீஷ்குமார் அவிநாசி பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், இன்று நான்கு பேரையும் அவிநாசி பாளையம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் திருப்பூரை சேர்ந்த தினேஷ்குமார் என்பவன் மீது 6 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.