இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். இதனால், குடும்பத்தின் முக்கிய வருமானம் பல வீடுகளில் பெண்களிடமிருந்தும் வருகிறது. இந்நிலையில், பணியில் இருக்கும் மனைவி திடீரென உயிரிழந்தால், அவரது குடும்ப ஓய்வூதியம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி பலரிடமும் எழுகிறது. கணவருக்கா? அல்லது குழந்தைகளுக்கா? இதுகுறித்து நடைமுறையில் உள்ள விதிமுறைகள் என்ன சொல்கின்றன என்பதை பார்க்கலாம்.
மத்திய குடிமைப் பணிகள் (ஓய்வூதியம்) விதிகள், 2021 மற்றும் ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS), 1995 ஆகியவற்றின்படி, பெண் ஊழியர் உயிரிழந்தால், அவரது சட்டப்பூர்வமான கணவரே குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான முதல் உரிமை பெற்றவராக இருப்பார். அவர் அரசு ஊழியராக இருந்தாலும், ஓய்வூதியம் பெறும் ஊழியராக இருந்தாலும், இந்த விதி பொருந்தும்.
பலரிடம், “மனைவியின் வருமானத்தை நம்பி வாழ்ந்தால்தான் கணவருக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும்” என்ற தவறான எண்ணம் உள்ளது. ஆனால், இது உண்மையல்ல. கணவர் மனைவியை பொருளாதார ரீதியாக சார்ந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை தற்போதைய ஓய்வூதிய விதிகளில் இல்லை. சட்டப்பூர்வமான கணவராக இருந்தாலே, குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி கிடைக்கும்.
ஆனால், இந்த விதிக்கு சில முக்கிய விதிவிலக்குகளும் உள்ளன. குறிப்பாக, மனைவி உயிருடன் இருந்தபோதே விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தாலோ அல்லது குடும்ப வன்முறை தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுத்திருந்தாலோ, அந்த வழக்குகள் முடிவடைவதற்கு முன்பே அவர் உயிரிழந்தால், குடும்ப ஓய்வூதியத்தில் கணவருக்கு முன்னுரிமை வழங்கப்படாது.
2024 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தத்தின்படி, இதுபோன்ற சூழ்நிலைகளில் தகுதியான குழந்தைகளுக்கே குடும்ப ஓய்வூதியத்தில் முன்னுரிமை வழங்கப்படும். இந்த விதி, விவாகரத்து அல்லது குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும் சந்தர்ப்பங்களில் மட்டுமே பொருந்தும். இதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லாத சாதாரண சூழ்நிலைகளில், உயிருடன் இருக்கும் கணவருக்கே குடும்ப ஓய்வூதியம் பெறும் முதல் உரிமை இருக்கும்.
குடும்ப ஓய்வூதியத்தின் தொகை, இறந்த பெண் ஊழியர் எந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாற்றினார் என்பதைப் பொறுத்து மாறுபடும். மத்திய அரசு ஊழியர்களுக்கு, குறிப்பிட்ட காலத்திற்கு கடைசியாக பெற்ற அடிப்படை சம்பளத்தின் 50 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். அதன் பிறகு, விதிகளின்படி அது 30 சதவீதமாக குறைக்கப்படும். அதே நேரத்தில், ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) கீழ் உள்ளவர்களுக்கு, அவர்கள் பணியாற்றிய ஆண்டுகள் மற்றும் பெற்ற சம்பளத்தின் அடிப்படையில் குடும்ப ஓய்வூதியத் தொகை கணக்கிடப்படும்.
Also Read: ஃபிரிட்ஜை இப்படி வச்சிருக்கீங்களா? கரண்ட் பில் எகிறிடும்… இப்பவே மாத்துங்க!


