நேருவின் பெயரை பயன்படுத்துவதில் என்ன தயக்கம் என பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சிக்கு கேள்வி எழுப்பினார்.
மாநிலங்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பேசிய பிரதமர் மோடி; இந்தியாவில் பத்து ஆண்டுகளாக பழங்குடியின சமுதாயத்தினரின் மேம்பாடு புறக்கணிக்கப்பட்டது. அவர்களது நலனுக்கு நாங்கள் உயர் முன்னுரிமை வழங்கினோம். அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில்தான் பழங்குடியினர் நல அமைச்சகம் என்ற தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார். அந்த அமைச்சகத்தின் கீழ், பழங்குடியினர் நலனுக்கான உறுதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

2047-க்குள் ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ என இந்தியாவை மாற்றுவது நமது தீர்மானமாக உள்ளது” என்று பிரதமர் குறிப்பிட்டார். நமக்குத் தேவையான வாய்ப்புகளைக் கண்டறிவதற்கு அரசு மேற்கொள்ளும் குறிப்பிடத்தக்க நடவடிவக்கைகளை அவர் எடுத்துரைத்தார். “இந்தியா மாபெரும் பாய்ச்சலை மேற்கொள்ளத் தயாராக உள்ளது; இனிமேல் அது பின்னடைவை சந்திக்காது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் உலகின் தலைமையை நாடு தக்கவைத்துக் கொண்டுள்ளது. டிஜிட்டல் இந்தியாவின் வெற்றி இன்று ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. செல்பேசிகளை இந்தியா இறக்குமதி செய்த காலத்தை நினைவுகூர்ந்த அவர், இன்று, மற்ற நாடுகளுக்கு செல்பேசிகளை ஏற்றுமதி செய்யும் பெருமையை நாம் பெற்றிருக்கிறோம் என்றார்.
மாநில அரசுகளுக்கு நாங்கள் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக காங்கிரஸ் கூறுகிறது. ஆனால், காங்கிரஸ் தனது ஆட்சி காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை 90 முறை கவிழ்த்துள்ளது. இந்திராகாந்தி சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி 50 முறை அரசாங்கங்களை கவிழ்த்துள்ளார்.

தமிழ்நாட்டில் கருணாநிதி, எம்.ஜி.ஆரின் ஆட்சியை காங்கிரஸ் கலைத்துள்ளது. ஆனால், திமுக அவர்களோடு கூட்டணி வைத்துள்ளனர். எம்.ஜி.ஆரின் ஆன்மா இதனை பார்த்து நிச்சயம் வருத்தம் அடையும். மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத்பவாரின் ஆட்சியை காங்கிரஸ்தான் கலைத்தது. அப்போது அவர் இளம் முதலமைச்சராக இருந்தார். கேரளாவில் சிபிஐ(எம்) ஆட்சியை நேரு கலைத்தார். ஆந்திராவில் என்.டி.ஆரின் ஆட்சியை கலைக்க காங்கிரஸ் முயற்சித்தது. மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கு பல்வேறு பிரச்னைகளை கொடுத்தது காங்கிரஸ் கட்சிதான். இந்த நாடு எந்த ஒரு குடும்பத்தின் சொத்தும் கிடையாது.
காந்தி – நேரு என குடும்ப பெயர்களில் 600 திட்டங்கள் இருந்ததாக நான் செய்தியில் படித்தேன். அவர்களுடையை தலைமுறையை சேர்ந்தவர்கள் ஏன் நேருவின் பெயரை குடும்பப் பெயராக வைக்கவில்லை. நேருவின் பெயரை எங்கேயாவது நாங்கள் குறிப்பிட மறந்துவிட்டால் காங்கிரசார் அப்செட் ஆகிவிடுகிறார்கள். நேரு மிகப்பெரிய மனிதர். பிறகு ஏன் அவரது பெயரை யாரும் குடும்பப் பெயராக பயன்படுத்துவதில்லை. நேரு பெயரை பயன்படுத்துவதில் உங்களுக்கு என்ன அவமானம்..? பயம்.. ? என கேள்வி எழுப்பினார்.