மாநில அரசு உடனான அனுபவம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். அதில் கோவை கார் குண்டுவெடிப்பு, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீதான தாக்குதல், தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் கொலை போன்ற பல்வேறு சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஏற்கனவே பாகிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக மத்திய உளவுத்துறை எச்சரித்து இருந்ததாகவும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்ற நிலையில், தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என்று எவ்வாறு கூற இயலும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆ.என். ரவி.
அத்துடன் திராவிட மாடல் என்ற ஒன்றே கிடையாது எனவும், ஒரே நாடு, ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு எதிரானது தான் இந்த திராவிட மாடல் வாசகம் என்றும் சுதந்திரப் போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவது தான் திராவிட மாடல் என்ற முழக்கம் என கூறியுள்ளார் ஆளுநர்.
இதனால் தான் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் இடம்பெற்று இருந்த சில பகுதிகளை நீக்கிவிட்டு வாசித்தேன் என்று கூறியுள்ளார். அதோடு, தன்னுடைய உரைக்குப் பின்னர் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பதற்காக காத்திருந்ததாகவும், ஆனால் சபாநாயகர் உடன் ரகசியமாக உரையாற்றி முதல்வர் தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளார் ஆளுநர்.
இதன் காரணமாகத்தான் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இருந்து பாதியில் தான் வெளியேறிதாக ஆளுநர் விளக்கம் அளித்திருக்கிறார்.
பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு எதிராக சித்தா பல்கலைக்கழக மசோதா இருப்பதாகவும், பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்பதால் அந்த மசோதாவை நிறுத்தி வைத்திருப்பதாகவும் ஆளுநர் கூறியிருக்கிறார்.
அத்துடன் ஆளுநர் மாளிகையில் நிதி செலவினங்களில் விதிமீறல் எதுவும் நடக்கவில்லை எனவும், முதலமைச்சர் மீது தனிப்பட்ட முறையில் தான் நல்ல மரியாதை வைத்திருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்து இருக்கிறார்.