திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (42). ஆட்டோ டிரைவரான இவருக்கு முத்துலட்சுமி (34) என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள். பாலசுப்பிரமணியனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தன் கணவருடன் ஏற்பட்ட தகறாரில் முத்துலட்சுமி தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
பின்னர் இருவரையும் அழைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பாக முத்துலட்சுமி தன் கணவன் வீட்டிற்கு சென்றார். சம்பவத்தன்று காலை, பாலசுப்ரமணியன் தூங்கிக் கொண்டிருந்தபோது முத்துலட்சுமி தண்ணீர் ஊற்றி அவரை எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. கோபத்தின் உச்சத்தில் சென்ற முத்துலட்சுமி, கொதிக்கும் எண்ணையை தன் கணவரின் வேட்டியை அவிழ்த்து ஆணுறுப்பில் ஊற்றியுள்ளார். இதில் வயிற்று பகுதியில் இருந்து கால்வரை அவரது உடல் வெந்த நிலையில் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. போலீசார் தற்போது முத்துலட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கிருஷ்ணாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.