பெங்களூர் மாநகர பகுதியில் துரஹள்ளியில் விஸ்வநாத் என்பவர், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டி வருகிறார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில், செக்யூரிட்டியாக சங்கரப்பா, 60 என்பவர் தனது மனைவி சிவம்மாவுடன் (50) வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சிவம்மா பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு , நடக்க முடியாமல், படுத்த படுக்கையில் உள்ளார். இதனால் கணவர் பெரும் வருத்தத்தில் இருந்துள்ளார். நேற்று முன்தைய தினத்தில் , மதிய நேரத்தில் மகன் கடைக்கு சென்றிருந்த நிலையில், மகளும் பணிக்கு சென்றுள்ளார்.
இந்த தருணத்தையே எதிர்பார்த்து காத்திருந்த கணவர், மனைவியை தண்ணீர் நிரம்பியிருந்த ஆழமான பகுதிக்கு துாக்கி சென்றுள்ளார். அந்த ஆழமான பகுதியில் வீசி கொலை செய்துள்ளார். பிறகு சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த மகன், தாயை காணவில்லை என தந்தையிடம் கேட்டுள்ளார்.
எனக்கு தெரியாது என்று பொய் கூறிவிட்டு தப்பியோடி விட்டார். இதனையடுத்து மகன் எல்லா இடங்களிலும் தேடிய போது, தண்ணீர் நிறைந்த பள்ளத்தில் தாயின் உடல் மிதந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய சங்கரப்பாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.