நடிகர் விஜயின் அரசியல் வரவு தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது தெரிந்ததே. விஜய்யை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகள் தீவிரம் காட்டின. இருப்பினும், சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், ‘முதலமைச்சர் வேட்பாளர் விஜய் தான் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பதே தமிழக அரசியலில் மிகப் பெரிய கேள்வியாக மாறியுள்ளது. 2011 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சுமார் 63 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்திருக்கிறது.
ஒருவேளை திமுக கூட்டணியில் அதிக இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்றால், காங்கிரஸில் சிலர் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறி வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே இக்கூட்டணியின் எதிர்காலத்தைப் பற்றி விவாதங்கள் எழுந்து வந்தாலும், பீகார் தோல்விக்குப் பிறகு இந்த விவாதம் தீவிரமாகியுள்ளது.
கரூரில் துயரத்துக்குப் பிறகு, ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் விஜய்யை அழைத்து பேசியதாக பரவிய செய்தி கூட்டணி அச்சாரமாக பார்க்கப்பட்டது. மறுபுறம் திமுக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்படுகிறோம் என்ற குற்றச்சாட்டு காங்கிரஸின் சில மூத்த தலைவர்களிடையே ஒலிக்கிறது. மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்ற சில காங்கிரஸ் தலைவர்கள் திமுகவுடன் ஏற்பட்ட பிரச்சனைகளால் தவெகவை அணுகலாம் என்ற தகவல்கள் வெளியாகின்றன.



