தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் லயோலா கல்லூரி இணைந்து வழங்கும் ஊடகவியல் சான்றிதழ் படிப்புக்கு இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் சென்னையிலுள்ள லயோலா கல்லூரியும் இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின்றன. ஊடகத் துறையில் ஆர்வம் கொண்டு செய்தியாளராக, எழுத்தாளராக, கருத்தாளராக தடம் பதிக்க விரும்பும் இளம் தலைமுறைக்குப் பெரும் வாய்ப்பாக இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊடகத்துறையின் முன்னோடிகளால் மாணவர்கள் நேரடியாக பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.
தமிழ் இதழியல் உலகில் வளர்ந்து வரும் புதிய துறைகளில் ஆழ்ந்த அலசலுடன் எழுத இளம் ஊடகர்களை உருவாக்கும் நோக்குடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் லயோலா கல்லூரியுடன் இணைந்து இந்த முயற்சியை எடுத்திருக்கிறது. ஊடகவியலுக்குத் தேவையான வலுவான அடிப்படைத் திறன்களை இந்தப் படிப்பு தருகிறது. கட்டணமில்லா இந்தப் படிப்பில், வாரந்தோறும் பயிற்சிப் பட்டறைகளும் கள ஆய்வுகளும் இடம் பெறுகின்றன.
பொருளாதாரம் மற்றும் நிதி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அரசியல் மற்றும் பண்பாடு, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு உள்பட பல்வேறு ஊடகப் பிரிவுகளை மாணவர்கள் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எழுத்து, ஒளிப்படம், வீடியோ, வானொலி, தொலைக்காட்சி, சமூக ஊடகம், திறன்பேசி, ட்ரோன் இதழியல் உள்பட பல்வேறு ஊடகப் பிரிவுகளில் சிறந்த துறைசார் நிபுணர்கள் வழியாக மாணவர்கள் திறன்களைப் பெறுவார்கள்.
பட்டப்படிப்பில் தேறிய 20 முதல் 25 வயது கொண்ட யாரும் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வாகிறவர்கள் வாரம் 5 நாட்கள் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் தினசரி வகுப்புகளுக்கு வர வேண்டும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். ஊடகவியல் சான்றிதழ் படிப்பைப் பற்றி மேலும் தகவலுக்கு https://www.loyolacollege.edu/CAJ/home என்ற தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதற்கு shorturl.at/nsU25 Conclusion என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.