பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் பிரமோத் தாஸ். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சுக்லா தேவி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், இருவரும் நல்லபடியாக வாழ்க்கை நடத்தி வந்தனர். திடீரென ஒரு நாள் மனைவியையும், அவரது தங்கையையும் காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தாஸ், பல இடங்களில் இருவரையும் தேடினார். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. சோகத்துடன் வீடு திரும்பிய தாசுக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய அவரது மனைவி வேறு ஒரு திருமணம் செய்து கொண்டதாகவும், இனி தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் கூறியுள்ளார். இதனைக் கேட்டு தாஸ் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். தம்பதியர் இருவருக்குள்ளும் எந்த சண்டையும் இல்லை. ஏன் தன்னை விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்ய வேண்டும்? என யோசித்தார். சுக்லா தேவி திருமணமாகி தாஸ் வீட்டுக்கு வந்த நாள் முதல் தாஸின் தங்கை சோனி மீது சுக்லாவுக்கு ஈர்ப்பு உண்டு. இருவரும் இணை பிரியா தோழிகளாக இருந்து வந்துள்ளனர்.

இருவரும் இணைந்து நட்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லலாம் என முடிவு செய்தனர். அதன்படி, சுக்லா தனது நாத்தனாரை காதலிக்க தொடங்கினார். இருவரும் காதல் மழையில் நனைய தொடங்கியுள்ளனர். நட்பிலிருந்து காதலாக மாறியதும் திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்துள்ளனர். தாங்கள் யோசித்தது போலவே திருமணமும் செய்து கொண்டு தனியாக வசிக்கவும் தொடங்கியுள்ளனர். இது குறித்து விளையாட்டாக கணவரிடம் தெரிவிக்க அவர் சிரித்துக் கொண்டே இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவரது மாமியார், இதனால் ஊரில் பலரும் தன்னை அவதூறாக பேசுவதாக கூறி தனது மகள் சோனுவை வலுக்கட்டாயமாக சுக்லாவிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்று விட்டார். இதுகுறித்து தற்போது சுக்லா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த விநோத சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “இந்த புகார் தொடக்கத்தில் விநோதமாக இருந்தது. இப்புகார் குறித்து விசாரிக்க பெண் அதிகாரி ஒருவரை நியமிக்க இருக்கிறோம். சுக்லாவின் காதல் விசித்திரமானது. அவர் தன்னை சோனுவின் கணவராக நினைத்து நடை, உடை பாவனைகளை ஆணாக மாற்றியுள்ளார். அதன்படி தலைமுடியை வெட்டியதுடன் தனது சுக்லாதேவி என்ற பெயரை சூரஜ் குமார் என மாற்றிக் கொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் உரிய விசாரணை தொடங்கப்படும்” என கூறியுள்ளனர்.