சென்னையில் வாலிபரை காதலித்து திருமணம் செய்து நகை, பணத்துடன் எஸ்கேப்பான இளம்பெண் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம் 1வது தெருவை சேர்ந்தவர் நடராஜன் (25). இவர், சானடோரியம் பகுதியில் உள்ள தனியார் மாவு நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்து வந்தார். அப்போது அபிநயா (எ) கயல்விழி (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அப்போது அபிநயா எனக்கு வயதான மாமாவை திருமணம் செய்து வைக்க பெற்றோர் வற்புறுத்தியதால் கோபத்தில் சென்னைக்கு வந்து விடுதி எடுத்து தங்கி வேலை செய்து வருகிறேன். இதனால் பெற்றோருடன் பேசுவது இல்லை என்றார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் காதலி அபிநயாவை திருமணம் செய்து கொண்டார் நடராஜன். திருமணத்திற்கு பிறகு அபிநயா வேலைக்கு செல்லவில்லை.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி அபிநயா திடீரென மாயமானார். வீட்டில் இருந்த பட்டு புடவைகள், 17 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் பணமும் சேர்த்து மாயமாகியுள்ளது. மேலும், அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போதும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் பதறிப்போன நடராஜன் குடும்பத்தினர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், செம்மஞ்சேரி அருகே உள்ள தனியார் பெண்கள் விடுதியில் அபிநயா தங்கியிருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் விரைந்து சென்று, அவரை பிடித்து தாம்பரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, பல அதிர்ச்சி தகவல் வெளியானது.

அபிநயா (எ) கயல்விழி கடந்த 2011இல் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த விஜய் என்பவரை திருமணம் செய்துள்ளார். அவருடன் ஒரு மாதம் வாழ்ந்து விட்டு விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் கடந்த 2013இல் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் (33) என்பவரை திருமணம் செய்துள்ளார். பின்னர், மதுரையில் பிரபல தனியார் துணிக்கடையில் வேலை பார்த்தபோது, உதயா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் மாயமானார். அதற்கு பிறகு 2020இல் மீண்டும் அபிநயா மாயமானார். அப்போது கேளம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வந்த போது ஆட்டோ ஓட்டுனர் பன்னீர்செல்வம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து 10 நாட்கள் வாழ்ந்துவிட்டு மாயமானார்.

அதன் பின்னர் நடராஜனை 4-வதாக திருமணம் செய்து நகை, பணத்துடன் மாயமாகியுள்ளார். அந்த நகைகளை விற்பனை செய்து அமீனுக்கு செல்போன், வாட்ச் என பல்வேறு பொருட்களை வாங்கி தந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அமீன் வேலை விஷயமாக துபாய் சென்று விட்டதால் பின்னர் மீண்டும் 2-வது கணவர் செந்தில்குமாருடன் வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து மீண்டும் கேளம்பாக்கம் பகுதியில் ஏற்கனவே தங்கி இருந்த தனியார் பெண்கள் விடுதிக்கு வந்தபோது போலீசார் பிடித்தனர்.