சசிகலா தன்னை மிரட்டி தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்து விட்டார் என்று ஆரம்பமான பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்று பன்னீர்செல்வத்திற்கு அடுத்தடுத்து நடைபெற்ற பல அவமானங்களின் போதெல்லாம் அவருக்கு ஆதரவாக இருந்தது பாஜக தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
பலமுறை பல இக்கட்டான சூழ்நிலையில், பன்னீர்செல்வம் நேரடியாக பாஜக தேசிய தலைமையையும், பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து அவர்களிடம் கண்கலங்கியது தமிழகமே அறிந்த கதை தான்.ஆனால் தற்போது கதை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது.
திருநெல்வேலியில் அதிமுகவின் அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டசபை உறுப்பினருமான கருப்புசாமி பாண்டியன் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த திருமண நிகழ்வுக்கு பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 21 மத திமுக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் எதையும் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தவில்லை என்று குற்றம் சுமத்தி இருக்கிறார். அதனைத் தொடர்ந்து, இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும் எனவும், அந்த வெற்றி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு நடுவே தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை பன்னீர்செல்வத்தை அவமதித்து விட்டதாக அவருடைய ஆதரவாளர்கள் சிவகங்கையில் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டதையும் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் வன்மையாக கண்டித்து இருக்கிறார்கள்.
அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையிலான உறவில் விஷம் கலப்பதாக குற்றம் சுமத்தி இருக்கின்ற அவர்கள், பன்னீர் செல்வத்தை சந்திப்பதற்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமியை அண்ணாமலை சந்தித்ததற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளரை அண்ணாமலை வாபஸ் பெற கூறியதற்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் வேட்பாளர் கே. எஸ். தென்னரசுவை ஆதரிப்பதாக தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்த பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், பாஜக தரப்பு பன்னீர் செல்வத்திற்கு நெருக்கமானதாக அறியப்பட்டு வந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கும் பாஜக உடனான கூட்டணி தொடரும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பதும், அண்ணாமலைக்கு பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து இருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.