தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. 2,299 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
புதிய வழிமுறைகள்
கிராம உதவியாளர் பணிக்கான சிறப்பு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, வருவாய்த் துறை செயலரின் கருத்துருவை பரிசீலித்த தமிழக அரசு, கிராம உதவியாளர் பணி நியமனத்துக்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள வழங்குவது தொடர்பாக வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, கல்வித் தகுதியில், SSLC-யில் தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும். மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர் SSLC-யில் தேர்வு பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.
இருசக்கர மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால் அதற்கு தேர்வு நடத்த தேவையில்லை. மிதிவண்டி அல்லது மோட்டார் வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருந்தால் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதற்கு 10 மதிப்பெண் வழங்கப்படும். தமிழ் வாசிக்கும், எழுதும் திறன் பெற்றிருந்தால், திறனுக்கேற்ப 30 மதிப்பெண் வரை வழங்க வேண்டும். நேர்காணல் குழுவின் முன் வாசித்து, எழுதிக்காட்ட வேண்டும். சம்பந்தப்பட்ட கிராமத்தில் வசிப்பவராக இருந்தால் 35 மதிப்பெண் அல்லது, தாலுகா எல்லைக்குள் வசிப்பவராக இருந்தால் 30 மதிப்பெண் வழங்கப்படும். நேர்காணல், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், பிற தனி வட்டாட்சியர் ஆகியோரைக் கொண்ட குழுவினரால் நடத்தப்படும்.
Read More: Read More: அடி தூள்..! கொங்கு மண்டலத்தில் 50,000 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி…! முழு விவரம்