கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 65 வயது நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிகளின் புகாரைத் தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையில், தலைமறைவாக இருந்த அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஊத்தங்கரை அருகே கிராமப் பகுதியில் வசித்து வருபவர் சின்னராஜ் (65). கால்நடை மருத்துவமனையில் பராமரிப்புத் துறை உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வீட்டில் இருந்தபோது அப்பகுதியில் விளையாடும் சிறுமிகளிடம் அவர் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
சம்பவத்தன்று அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுமிகளை தனியாக அழைத்துச் சென்ற சின்னராஜ், அவர்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது. மேலும், தனது செல்போனில் ஆபாச வீடியோக்களைக் காட்டியதாகவும் சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமிகள் அங்கிருந்து தப்பி வீடு திரும்பி, நடந்த சம்பவத்தை பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
போலீஸார் விசாரணையைத் தொடங்கியதை அறிந்த சின்னராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றார். அவரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீஸார் அவரை கைது செய்தனர்.
சின்னராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: 13 மசோதாக்கள்… 12-க்கு ஆளுநர் ஒப்புதல்; ஒன்றில் மட்டும் நீடிக்கும் பரிசீலனை! காரணம் என்ன?



