13 மசோதாக்கள்… 12-க்கு ஆளுநர் ஒப்புதல்; ஒன்றில் மட்டும் நீடிக்கும் பரிசீலனை! காரணம் என்ன?

5c76987fa0c23bfa1a454c9e436bf30bfe5dfd4adc4e0e47d6af165a7f1e3c50

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 13 சட்ட மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். குறிப்பாக, சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்த சில நாட்களிலேயே பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைத்திருப்பது கவனம் பெற்றுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்பான ஒரு மசோதா மட்டும் அடுத்தகட்ட பரிசீலனைக்காக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.


தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தொடரில் நகர்ப்புற நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள், நிதி நிர்வாகம், வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்தல் மற்றும் அரசுப் பணியாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக ராஜ்பவனுக்கு அனுப்பப்பட்டன. இதில் 12 மசோதாக்களுக்கு அடுத்த சில நாட்களிலேயே ஒப்புதல் கிடைத்துள்ளது.

ஆகஸ்ட் 10-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மதுபானங்களுக்கான மதிப்புக் கூட்டு வரிச் சட்ட மசோதாவுக்கு செப்டம்பர் 2-ஆம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

செப்டம்பர் 8-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 6 மசோதாக்களுக்கு செப்டம்பர் 12-ஆம் தேதி ஒப்புதல் வழங்கப்பட்டது. நகர் ஊரமைப்புத் திருத்தச் சட்டம், முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத் திருத்தச் சட்டம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் திருத்தச் சட்டம், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கார் வழங்குதல் தொடர்பான திருத்தச் சட்டம், ஊரக உள்ளாட்சிகளின் தனி அலுவலர் பதவிக்கால நீட்டிப்பு மற்றும் நிதி மசோதா ஆகியவை இதில் அடங்கும்.

இதையடுத்து, செப்டம்பர் 8-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட மேலும் 5 மசோதாக்களுக்கு செப்டம்பர் 13-ஆம் தேதி ஒப்புதல் கிடைத்தது. தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்தல் திருத்தச் சட்டம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்வது தொடர்பான சட்டம், சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான 2 மசோதாக்கள் மற்றும் மதிப்புக் கூட்டு வரி தொடர்பான 2 சட்ட மசோதாக்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதால், அவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசாணைகள் அடுத்தகட்டமாக வெளியிடப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியாளர் தேர்வை டிஎன்பிஎஸ்சி மூலம் மேற்கொள்ளும் நடைமுறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் தொடர்பான மாற்றங்கள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன.

இதற்கிடையே, தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்களின் நிர்வாக நடைமுறைகள் தொடர்பான ஒரு மசோதாவுக்கு மட்டும் ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழக நிர்வாக விதிகளுடன் தொடர்புடைய இந்த மசோதா, அரசியலமைப்புச் சட்ட நடைமுறைகளின்படி குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதன் மூலம், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், மீதமுள்ள ஒரு மசோதா குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது.

Also Read: 22 வயது பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் கொடுமை… 2 ரயில்வே போலீசார் உட்பட 6 பேர் மீது வழக்கு!

Saranya

Next Post

பெண் என்பதால் வேலை மறுப்பு... இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு ரூ.12 லட்சம் அபராதம்; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Fri Sep 18 , 2026
பெண் என்பதற்காக மட்டுமே வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், பல ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. எல்பிஜி சிலிண்டர் நிரப்பும் பணிக்கு தகுதி இருந்தும் நியமனம் மறுக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. பெண் என்பதைக் காரணமாகக் கொண்டு வேலைவாய்ப்பை மறுப்பது […]
supreme court 1

You May Like