சாணக்கியர் இந்தியாவின் புகழ்பெற்ற சிந்தனையாளர்களில் ஒருவராகவும், பொருளாதார நிபுணராகவும், அரசியல் ஆலோசகராகவும் அறியப்படுகிறார். அவர் எழுதியதாகக் கருதப்படும் ‘சாணக்கிய நீதி’ நூலில், மனிதர்கள் வாழ்க்கையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அதில், சில விஷயங்களை ஒருபோதும் வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை என்றும், அவற்றை சரியாக அணுகினால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்றும் சாணக்கியர் கூறியதாக குறிப்பிடப்படுகிறது.
அதில் முதலாவது வறுமை. ஒருவர் எந்த குடும்பத்தில் பிறக்கிறார் என்பது அவரது கட்டுப்பாட்டில் இல்லை. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்துவிட்டோம் என்பதற்காக ஒருபோதும் தாழ்வு மனப்பான்மையோ வெட்கமோ கொள்ள வேண்டியதில்லை. இருக்கும் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, கடினமாக உழைத்து வாழ்க்கையை மாற்றுவதில்தான் கவனம் செலுத்த வேண்டும் என்பதே சாணக்கியரின் கருத்தாக கூறப்படுகிறது.
அடுத்ததாக கடின உழைப்பு குறித்து சாணக்கியர் வலியுறுத்துகிறார். எந்த வேலையாக இருந்தாலும் அதைச் செய்வதில் வெட்கப்படக் கூடாது. வாழ்க்கையில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்வதே முன்னேற்றத்திற்கான அடிப்படை என அவர் கூறியதாக சாணக்கிய நீதியில் குறிப்பிடப்படுகிறது. விடாமுயற்சியுடன் உழைப்பவர்களுக்கு ஒரு கட்டத்தில் தலைமைப் பொறுப்புகளும் வெற்றியும் கிடைக்கக்கூடும் என்பதே இதன் கருத்து.
மூன்றாவதாக உணவு குறித்து சாணக்கியர் கூறியதாக குறிப்பிடப்படுகிறது. பசி என்பது உடலின் இயல்பான தேவையாகும். உடலுக்கு தேவையான ஆற்றலை உணவு வழங்குவதால், உணவு சாப்பிடுவதில் ஒருபோதும் வெட்கப்பட வேண்டியதில்லை. பசியைத் தவிர்த்து இருப்பதைவிட, உடலின் தேவையை உணர்ந்து சரியான அளவில் உணவு எடுத்துக்கொள்வது அவசியம் என அவரது கருத்துகள் வலியுறுத்துகின்றன.
இதனால், வறுமையை நினைத்து வெட்கப்படாமல் முன்னேறுவது, உழைப்பை ஒருபோதும் குறைவாக நினைக்காமல் தொடர்ந்து முயற்சிப்பது, உணவு சாப்பிடுவதில் தயக்கம் காட்டாமல் உடலின் தேவையை கவனிப்பது ஆகியவை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய முக்கியமான அணுகுமுறைகளாக சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளன.
Also Read: குழந்தைகள் வெளியில் அடம்பிடிக்கிறார்களா? பெற்றோர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 எளிய வழிகள்!



