தமிழகத்தில் காஞ்சிபுரம், கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தென்னிந்திய பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை, வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுசன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
வரும் 11 முதல் 14-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும், நாளை நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப் பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
11-ம் தேதி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மவாட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருவண்ணா மலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். மேலும், 12-ம் தேதி, கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கர்நாடகா-கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் இன்று அதிகபட்சமாக மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.