தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியை சேர்ந்த 6ஆம் வகுப்பு பள்ளி மாணவர் ஒருவர், கடுமையான வயிற்று வலி தாங்க முடியாமல் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட சிறுவன் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து தீவிர வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த அந்த மாணவர், இன்று வீட்டில் இருந்த நேரத்தில் வலியின் வேதனை தாங்க முடியாமல் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார்.
தீப்பற்றி எரிந்ததில் சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக தீயை அணைத்து பலத்த தீக்காயங்களுடன் இருந்த மாணவரை மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பட்டீஸ்வரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


