உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான போரைத் தொடங்கியதில் இருந்து, உக்ரைன் பொதுமக்கள் மற்றும் போர்க் கைதிகளுக்கு எதிராக ரஷ்யப் படைகள் 892 பாலியல் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை ஒன்று குற்றம்சாட்டியுள்ளது. இதில் குழந்தைகள் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் அடங்கும்.
உக்ரைனுக்கான ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்புப் பணி குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட இந்த அறிக்கையில், கற்பழிப்பு, கூட்டு பாலியல் வன்கொடுமை, பாலியல் உறுப்புகளைச் சிதைப்பது, மின்சார அதிர்ச்சி அளிப்பது மற்றும் தாக்குவது போன்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
பிப்ரவரி 24, 2022 முதல் ஜூலை 31, 2026 வரையிலான காலகட்டத்தில் இந்த 892 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர்களில் 16 குழந்தைகளும் அடங்குவர்.
இந்த அறிக்கைக் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் தீவிர கவலை தெரிவித்துள்ளார். “உக்ரைன் மீதான ஆயுதமேந்திய தாக்குதலின் ஒரு கொடூரமான அம்சமாக பாலியல் வன்முறை உருவெடுத்துள்ளது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட 892 பேரில் 725 பேர் ஆண்கள், 151 பேர் பெண்கள் ஆவர். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் 4 வயது சிறுமி முதல் 82 வயது மூதாட்டி வரை அடங்குவர். ரஷ்ய ராணுவத்தினரால் 46 பெண்கள் மற்றும் சிறுமிகள் கற்பழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், அதில் மூன்று பெண்கள் கற்பழிப்பு காரணமாகக் குழந்தைகள் பெற்றெடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த உக்ரைன் போர்க் கைதிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் பாலியல் வன்முறை பரவலாக நடந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ரஷ்யப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட முன்னாள் உக்ரைன் போர்க் கைதிகளில் சுமார் 75 சதவீதத்தினரும், சிறைபிடிக்கப்பட்ட பொதுமக்களில் பாதியளவினரும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாகக் கூறியுள்ளனர்.
குறைந்தது 155 ஆண்கள் “டாபிக்” (tapik) எனப்படும் சோவியத் காலத்து ராணுவ போன் சாதனத்தைப் பயன்படுத்தித் தங்களது பாலியல் உறுப்புகளில் மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், காவல்துறை லத்தி, கதவு சாவிகள் மற்றும் மண்வெட்டி பிடிகளைக் கொண்டு கொடூரமான முறையில் பாலியல் சித்திரவதைகள் செய்யப்பட்டுள்ளதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யப் படைகள் மீதான இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எவ்வித விசாரணையோ அல்லது தடுப்பு நடவடிக்கைகளோ மாஸ்கோ நிர்வாகம் எடுக்கவில்லை என்று ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது. போர்க் காலத்தில் பதிவான மொத்த பாலியல் வன்முறைச் சம்பவங்களில் 89 சதவீதம் ரஷ்யப் படைகளாலும், 11 சதவீதம் உக்ரைன் படைகளாலும் நடத்தப்பட்டவை என ஐ.நா. தரவுகள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் மற்றும் போர்க் கைதிகளை சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்க ரஷ்யா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வோல்கர் டர்க் கோரிக்கை விடுத்துள்ளார்.



