தமிழக கடல்பகுதிகளில் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழ்நாடு மீனவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழக கடற்பகுதிகளில் இன்று முதல் 21-ம் தேதி வரை, மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், மீனவர்களுக்கு தமிழ்நாடு மீனவர் நலத்துறை முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் அறிவுறுத்தபட்டுள்ளது. அனைத்து மண்டல இயக்குனர்களுக்கும் மீன்வளத்துறை இந்த எச்சரிக்கையை வழங்கியுள்ளது.