கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்கி படித்து வந்த தஞ்சையைச் சார்ந்த மாணவன் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி பாராமெடிக்கல் சயின்ஸ் படித்து வந்த மாணவர் சுமித்ரன் (20). இவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆலம்பள்ளம். இவர் இந்த கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து இருந்தார்.
கடந்த சில நாட்களாகவே சுமித்ரன் யாருடனும் அதிகமாக பேசாமல் தனிமையிலேயே தனது நாட்களை கழித்து வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று காலை சக மாணவர்கள் எழுந்து பார்த்தபோது சுமித்திரன் அவர்களுடன் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அவரை விடுதி எங்கும் தேடி இருக்கின்றனர். அப்போது விடுதியின் மாடியிலிருந்து இரும்பு கம்பி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்திருக்கிறார் சுமித்ரன். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் விடுதி நிர்வாகத்திடம் இதை தெரியப்படுத்தி இருக்கின்றனர்.
விடுதி நிர்வாகம் காவல்துறையில் தகவல் தெரிவிக்க காவலர்கள் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக சக மாணவர்களிடமும் நிர்வாகத்திடமும் காவல்துறை விசாரணை நடத்தியது. அவர் தங்கி இருந்த அறையையும் சோதனை செய்தது.
இறப்பதற்கு முன்பாக அவர் எழுதிய கடிதம் ஒன்று சோதனையில் காவல்துறைக்கு கிடைத்திருக்கிறது. அந்த கடிதத்தில் ” என் பெற்றோருக்கு நல்ல பிள்ளையாக என்னால் இருக்க முடியவில்லை இந்த உலகில் நான் பிறந்ததை பாவமாக கருதுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என எழுதி இருக்கிறார் சுமித்ரன். இந்தக் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.