தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை தடுப்பதற்கு மாநில அரசும், காவல் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இருந்தாலும் அதில் எந்தவித பயனும் இல்லை.
அந்த வகையில், அரியலூர் மாவட்டம் உஞ்சினி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்(22) அவருடைய உறவினர் வீட்டில் தங்கி இருந்து வளர்ந்து வந்தார் அப்போது நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியிடம் அவரை காதலிப்பதாக கூறியிருக்கிறார். அதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இதற்கு பயந்த மாணவி லட்சுமணனை 2 வருடங்களாக காதலித்து வந்தார். இவர்கள் காதல் விவகாரம் அந்த மாணவியின் வீட்டிற்கு தெரியவே மாணவியின் பெற்றோர் அந்த மாணவியை கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து, லட்சுமணனுடன் பேசுவதை அவர் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த லட்சுமணன் ஆசை வார்த்தை கூறி மாணவியை தன்னுடன் அழைத்துச் சென்று சென்ற வருடம் ஜூலை மாதம் 18ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் ஜெயங்கொண்ட மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். இந்த வழக்கை விசாரித்த அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் குற்றவாளி லட்சுமணனுக்கு ஆயுள் தண்டனையும், 1,10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். அதோடு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடாக 7 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.