சென்னை வடபழனியைச் சேர்ந்த 27 வயது இளம் பெண் ஒருவர் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது நிஷாந்த் என்ற இளைஞர் உடன் நட்பாக பழகி வந்தார். இந்த நட்பு நாளடைவில் இருவருக்கும் இடையில் காதலாக மாறியது. கல்லூரியில் சேர்ந்த பின்னரும் கூட இவர்களுடைய காதல் தொடர்ந்து வந்தது.
திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து பல முறை அந்த இளம் பெண்ணை நிஷாந்த் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதோடு கொஞ்சம், கொஞ்சமாக 68 லட்சம் ரூபாய் வரையில் அந்த பெண்ணிடம் பணம் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கு நடுவே நிஷாந்த் தன்னை ஏமாற்றுவதை அறிந்து கொண்ட அந்த இளம் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி இருக்கிறார். ஆனாலும் ஏதேதோ காரணங்களை முன்வைத்து அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்து வந்திருக்கிறார்.
நிஷாந்த் இந்த சூழ்நிலையில் தான் சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் சி.இ.ஓ மற்றும் தொழிலதிபரின் மகளை நிஷாந்த் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்.
இதனை எவ்வாறோ தெரிந்து கொண்ட அந்த இளம் பெண் இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் புகார் வழங்கினார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கு நடுவில் தொழிலதிபர் மகளுடன் நிஷாந்துக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. அதோடு இதனை அறிந்து கொண்ட காவல் துறையினர் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். போக்சோ போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நிஷாந்தை தேடி வந்த நிலையில், அவர் திடீரென்று தலைமறைவானார். இது குறித்து நிஷாந்தின் பெற்றோரிடம் விருகம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இத்தகைய நிலையில், சிஇஓ மகளை திருமணம் செய்து ஏமாற்ற முயற்சி செய்த நிஷாந்த் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடலை மீட்டெடுக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். பாலியல் வழக்கு, பண மோசடி, திருமணம் செய்து ஏமாற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபட்ட இளைஞர் திருமணம் நின்று போன விரக்தியில் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.