தற்சமயம் பெண் குழந்தைகளை பெற்றோர்கள் வீட்டை விட்டு வெளியே அனுப்புவதற்கு பயப்படுகிறார்கள். காரணம், நாடு முழுவதும் பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது.
ஆனாலும் பெற்றோர்கள் குழந்தைகளை நம்பிக்கையுடன் அனுப்பி வைப்பது பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மட்டுமே. ஆனால் அப்படிப்பட்ட இடத்திலும் கூட அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கும் அருவருக்கத்தக்க செயலை செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிலும் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களே இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வருந்தத்தக்க செய்தியாக இருக்கிறது.
அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் டாங்கோர்லி என்ற பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பணிபுரிந்து வரும் 52 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர் 5ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 8️ பேருக்கு ஆபாச வீடியோக்களை காட்டியதாகவும், அவர்களை ஆபாசமாக பல இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே மாணவிகள் இது தொடர்பாக தங்களுடைய பெற்றோர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர்கள் உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் வழங்கினர். ஆகவே அந்தப் புகாரை அடிப்படையாகக் கொண்டு பாலியல் தொல்லை புகாருக்குள்ளான ஆசிரியரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்னர் அந்த ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
அதோடு மட்டுமல்லாமல் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு பணியிடை நீக்கம் செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆபாச வீடியோக்களை காண்பித்து ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொழில் கொடுத்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.