திருவள்ளூர் அருகே பெரிய குப்பம் தெருவில் கிருஷ்ணமூர்த்தி கற்பகம் என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும் 9 வயதில் பிரதிக்ஷா என்ற மகளும் இருக்கிறார்கள் 9 வயது பிரதிக்ஷா திருவள்ளூரில் இருக்கின்ற தனியார் பள்ளி ஒன்றில் 4ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி பிரதிக்ஷா பாடல்களுக்கு வாய் சேர்த்து நடமாடி instagram பக்கத்தில் 50க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் சிறுமி பிரதிக்ஷா தன்னுடைய பாட்டி வீட்டின் எதிரில் விளையாடிக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு அவருடைய தந்தை கிருஷ்ணமூர்த்தி தாய் கற்பகம் உள்ளிட்டோர் சிறுமியிடம் விளையாடியது போதும் போய் படி என்று கண்டித்ததாக சொல்லப்படுகிறது. அதோடு வீட்டின் சாவியை சிறுமியிடம் கொடுத்துவிட்டு இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளனர் தம்பதியினர்.
அப்போது வீட்டின் கதவு உட்புறமாக தாழிடப்பட்டு இருந்ததால் பலமுறை சிறுமியை அழைத்தும் கதவை தட்டியும் திறக்காததால் பயந்து போன தந்தை கிருஷ்ணமூர்த்தி ஜன்னல் கதவை உடைத்து பார்த்தபோது சிறுமி வெள்ளை நிற சிறிய துண்டால் ஜன்னல் கம்பியில் கட்டி தூக்கிட்டு கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சிறுமியை மீட்டு உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
சிறுமிக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையிலும், அந்த சிறுமி திடீரென்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த திருவள்ளூர் நகர காவல் துறையை சேர்ந்தவர்கள் சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.