நாகர்கோவிலில் மாணவிகளை ஆசைவார்த்தைகள் கூறி காதல் வலையில் விழ வைத்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, தனது நண்பர்களுக்கும் இரையாக்கிய காமக் கொடூரன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் தான் இந்த குற்றச்செயல்களை தொடர்ந்து செய்து வந்துள்ளார். 24 வயது ஆகும் கட்டிட தொழிலாளியாக வேலை செய்யும் இவரது டார்கெட் பள்ளி மாணவிகள்தான். அவர்களிடம் நட்பாக பழகி, ஆசை வார்த்தைகள் கூறி, பின்னர் காதல் வலையில் சிக்க வைப்பதில் கில்லாடி என்று கூறப்படுகிறது. காதலில் விழுந்த மாணவிகளிடம் உல்லாசமாக இருந்துவிட்டு பின்னர் அவர்களை ஏமாற்றி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் விக்னேஷ்.
அதேபோல, கடந்த 2020இல் ஒரு பள்ளி மாணவியை காதலிப்பது போல நடித்து அந்த மாணவியை மூளைச் சலவை செய்து தனது நண்பனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின் விவரம் அறியாத மாணவியிடம், அவரோடு ஒன்றாக இருந்ததை கூறி, அதை வைத்து மிரட்டி தன் நண்பர்கள் 2 பேரையும் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்துள்ளார். இதுகுறித்து அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில், விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விக்னேஷ் மீது வடசேரி காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு, அடிதடி வழக்கு ஆகியவையும், கருங்கல் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு ஆகியவையும் நிலுவையில் உள்ளது. இவ்வளவு வழக்குகள் இருந்தும் மீண்டும் வழக்கம் போல தன் லீலைகளை செய்துள்ளார் விக்னேஷ்.
சமீபத்தில் ஆசாரிபள்ளத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு விக்னேஷ் பற்றிய உண்மைகளை தெரிந்துகொண்ட அந்த மாணவி, தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே அந்த மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், விக்னேஷ் மீது காவல்துறையினர் போக்சோ வழக்குப் பதிவு செய்தனர். ஏற்கனவே ஒருமுறை அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை காவல்துறையில் சிக்காத விக்னேஷ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவரையும், அவரது நண்பர்களையும் தற்போது போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.