முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகே குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், தரணிதரன் மற்றும் சங்கர் உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.
இந்த செய்தியை கேட்டு மிகுந்த மன வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். தற்சமயம் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்ற பகுதியை சேர்ந்த மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் திரு அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர் தீபன் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் மரியா சோபி, மஞ்சுளா மற்றும் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் உள்ளிட்டோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அதோடு கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன் என்பவர் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இத்தகைய நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவருடைய உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வது மட்டுமல்லாமல், அவர்களுடைய குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும், மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.