சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் நாள்தோறும் பேருந்து மற்றும் ரயில்களின் மூலமாக கல்லூரிகளுக்கு வருகை தருகிறார்கள். இப்படி வரும்போது தாங்கள் படிக்கும் கல்லூரி தான் கெத்து என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தும் விதமாக, தேவையற்ற ரகளையில் மாணவர்கள் தொடர்ந்து, ஈடுபட்டு வருகிறார்கள். அது போது இது போன்ற வீடியோக்கள் வைரலாகி, அதனால் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டாலும் மாணவர்களின் அட்டகாசம் குறைந்தபாடில்லை.
இந்த நிலையில், நேற்று அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஹால் டிக்கெட் வாங்குவதற்காக தொடர்வண்டியில் பயணம் செய்தார்கள். அப்போது மின்சார ரயில் அரக்கோணத்தில் இருந்து இங்கு கல்லூரி அருகே வந்து நிற்கும்போது மாணவர்கள் பாட்டு பாடிக்கொண்டே ஆபத்தான முறையில் பயணம் செய்திருக்கிறார்கள். அப்போது நாங்க எல்லாம் பச்சையப்பன் காலேஜ் எங்ககிட்ட வம்பு வெச்சுக்காதீங்க என்று கோஷம் எழும்பியவாறு சென்றுள்ளனர்.
அதில் ஒரு மாணவன் படிக்கட்டில் தொங்கியபடி பட்டாக்கத்தியை நடைமேடையில் தேய்த்தபடியே சென்றது குறித்த வீடியோ வைரலாக பரவியது. இதை கண்டு மேடையில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு விலகிச் சென்றனர். இது குறித்து ஆவடி ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வீடியோ ஆதாரத்தை அடிப்படையாக வைத்து கல்லூரி மாணவர்களான அபினேஷ், சரண்ராஜ் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.