பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கின்ற டிபிஐ வளாகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தமிழக முழுவதிலும் இருந்து வந்த 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று கொண்டனர்.
இது தொடர்பாக பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்ததாவது, திமுக ஆட்சிக்கு வந்து இன்னும் தேர்தல் வாக்குறுதையில் அறிவித்தபடி பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் காலம் கடத்தி வருகிறது. மே மாதம் சம்பளம், ஊதிய உயர்வு எதுவுமே இதுவரையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கி முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் பணி காலத்தில் இறந்து போன பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எதுவுமே செய்யவில்லை என்று குற்றம் சுமத்தி இருக்கிறார்.
கடந்த 2012 ஆம் வருடம் அரசு பள்ளிகளில் 16000 பகுதி நேர ஆசிரியர்கள் உடர்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் உள்ளிட்ட பாடங்களில் 5 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். வாரம் 3 அரை நாட்கள் என்ற ரீதியில் மாதம் 12 அரை நாட்கள் பணி புரிய வேண்டிய நிலையில், கூடுதலாகவே பணியாற்றுகிறோம். சம்பள உயர்வு முதன்முதலில் 2014 ஆம் வருடம் 2000 ரூபாய் வழங்கப்பட்டது.
அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு 700 ரூபாய் சம்பளம் உயர்த்தப்பட்டது. கடைசியாக 2021 ஆம் ஆண்டு 2300 சம்பளம் உயர்த்தப்பட்டது. தற்போது 10000 ரூபாய் ஊதியம் வாங்குகிறோம். இதனால் எங்களுடைய வாழ்வாதமும் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே தொகுப்பு ஊதியத்தை ஒழித்து விட்டு காலமுறை சம்பளம் வழங்கி தமிழக முதலமைச்சர் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.