நாகர்கோவிலில் ரோமன் கத்தோலிக்க மறை மாவட்டம் (ஆர்.சி.டயசிஸ்) கோட்டார் கட்டுப்பாட்டில் சிறுபான்மையினர் பள்ளி மற்றும் தேவாலயங்கள் உள்ளன. இப்பள்ளிக்கு மத்திய, மாநில அரசு சார்பில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இங்குள்ள தேவலாயம் மற்றும் அதன் சொத்துக்களை நிர்வகித்து பாதுகாக்கும் பணியில் 20 பேர் ஈடுபட்ட வருகின்றனர். இச்சூழலில் கடந்த 2004 இல் இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷன் அதிகாரிகள், கோட்டாரில் உள்ள பேராயர் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் தேவாலயத்தில் பணி புரியும் 20 தொழிலாளர்களுக்கு வருகை பதிவேடு மற்றும் ஆவணங்கள் பயன்படுத்தி வருவது தெரிந்தது. மேலும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதியும் செலுத்தப்பட்டு வருவது தெரிந்தது. இதையடுத்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், கடந்த 1997 முதல் 2006 வரையிலானகால கட்டத்திற்கு தொழிலர்கள் பங்களிப்பு தொகையாக இஎஸ்ஐ க்கு ரூ. 4,94,955 செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து நாகர்கோவில் தொழிலாளர் நீதி மன்றத்தில் ரோமன் கத்தோலிக்க மறை மவாட்டம் சார்பில் தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
நாகர்கோவில் ரோமன் கத்தோலிக்க மறை மாவட்ட (ஆர்.சி. டயசிஸ் ஆப் கோட்டார்) நிர்வாகி ப்ரான்சிஸ் போர்கியா தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு: தேவாயத்தில் பணி புரிவோர் சேவை மனப்பான்மையுடன் உள்ளனர். இவர்கள் தொழிலாளர் நலத்துறைக்கு கீழ் வர மாட்டார்கள். எனவே, இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷன் அதிகாரிகள் செலுத்த விதித்த ரூ.4,94,955 ரத்து செய்து உத்தர விட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். விஜயகுமார் பிறப்பித்த உத்தரவு:
தேவாலயத்தில் 20 தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கான சம்பளம், வருகை பதிவேடு மற்றும் ஆவணங்கள் முறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மனுதாரர் தரப்பில், இங்கு பணி புரிபவர்கள் சேவை செய்பவர்களாக தெரிவிக்கின்றனர். இங்கு பணி புரியும் 20 பேருக்கும் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறது. அப்படி யெனில் இ.எஸ்.ஐ. சட்டம் அவர்களுக்கு பொருந்தும் எனக் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி.