பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது கராச்சி சிறையிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியுள்ளனர்.
பாகிஸ்தானில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது சிறையின் சுவரில் விரிசல் ஏற்பட்டது. அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கராச்சி சிறைச்சாலையில் சுமார் 700 முதல் 1000 கைதிகள் அவர்களது சிறை அறைகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பிரதான வாயிலின் அருகில் ஒன்று சேர்க்கப்பட்டிருந்தனர்.
இதனைப் பயன்படுத்தி, அந்தக் கைதிகளில் ஒரு குழுவினர் காவலர்களுக்கு எதிராக மோதலில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்புக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு கைதி உயிரிழந்தார். மேலும், 4 பாதுகாப்பு வீரர்கள் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, பல்வேறு முக்கிய குற்றவழக்குகளில் கைதான 216 சிறைக்கைதிகள் அங்கிருந்து தப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், கராச்சி நகரம் முழுவதும் தற்போது உச்சக்கட்ட எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டு, பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தப்பியோடியவர்களில் 75 பேர் தற்போது மீண்டும் சிறைப்பிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் அடையாளங்கள் மற்றும் பதிவுகள் அனைத்தும் உள்ளன என்றும், அவர்களின் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
தலைமறைவாக உள்ளவர்களைக் கண்டுபிடிக்க சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்எஸ்யூ), விரைவு அதிரடிப் படை (ஆர்ஆர்எஃப்) இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. இந்தச் சம்பவம் பாகிஸ்தான் முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ள நிலையில் இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: எடை குறையும்.. நல்லா தூக்கம் வரும்.. இரவில் இதை சாப்பிடுங்க..!! எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்..