அண்ணா பல்கலைக்கழக ஞானசேகரன் பற்றி பேசினால் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஏன் இத்தனை பதட்டமைடைகிறார் என்று தெரியவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அனைவரும் அறிந்ததே. சம்பவம் நடந்த மறுநாள் கோட்டூர்புரம் போலீஸார் ஞானசேகரனைக் கைது செய்கிறார்கள். பின்னர் அன்று மாலை விடுவிக்கிறார்கள். அதன்பிறகு, டிசம்பர் 25-ம் தேதி ஞானசேகரனை போலீஸார் மீண்டும் கைது செய்கின்றனர். தற்போது, 5 மாதங்கள் கழித்து ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வந்துள்ளது.
முதலில் அவரை ஏன் டிச.24-ம் தேதி விடுவித்தார்கள்.. ? ஆதாரங்களை அழிப்பதற்காகவா.? 23-ம் தேதி சம்பவம் முடிந்த சிறிது நேரத்தில் கோட்டூர்புரம் காவல் உதவி ஆய்வாளரைத் தொடர்புகொண்டு ஞானசேகரன் பேசியுள்ளார். அதன்பிறகு 9 நிமிடங்கள் கழித்து அந்த காவல்துறை அதிகாரி ஞானசேகரனை செல்போனில் தொடர்புகொண்டு பேசுகிறார். அந்த காவல்துறை அதிகாரி யார்? என்ற தகவலை 48 மணி நேரம் கழித்து வெளியிடுகிறேன் என கூறி இருந்தார்.
இதற்கு பதில் அளித்து இருந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மத்தியில் ஆட்சியில் இருப்பது பாஜக அரசு தான். தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் பேசி மொத்த ஆதாரங்களையும் வெளியிடுவதில் என்ன தயக்கம் என கேள்வி எழுப்பு இருந்தார். இதற்கு தனது எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ள பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை; அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரன், குற்றம் நடந்த அன்றும், அதற்கு அடுத்த தினமும், யார் யாருடன் தொலைபேசியில் பேசினான், அவனுடன் பேசியவர்கள் வேறு யார் யாருடன் பேசினார்கள் என்ற முழு விவரங்களையும், எனது காணொளியில் கூறியிருந்த பின்னரும், தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, அதே தகவல்களை ஏன் வெளியிடவில்லை என்று கேட்கிறார். அதிலும், குறிப்பாக அவர் ஏன் இத்தனை பதட்டமைடைகிறார் என்று தெரியவில்லை.
ஒரு பொதுப் பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்கும் முன்னர், அது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்வது ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு அழகு. செல்வப்பெருந்தகை அவர்கள், எனது காணொளியை முழுமையாகக் காணும்படி கேட்டுக் கொள்கிறேன். வேண்டுமென்றால், அவருக்கு வாட்சப்பில் அந்தக் காணொளியை அனுப்பி வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Read More: உயர்கிறதா மின் கட்டணம் & அரசுப் பேருந்துக் கட்டணம்…? அமைச்சர் சிவசங்கர் தந்த பதில்…!