தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, ஜூன் 9 முதல் 13-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம், 2022-23 கல்வியாண்டு முதல் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டம் 2026-27 கல்வியாண்டு வரை தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளது. எனவே, எண்ணும் எழுத்தும் சார்ந்து நடப்பாண்டில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கு முதல் பருவத்துக்கான பாடப்பொருள் உருவாக்கப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன.
இந்நிலையில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பாடப்பொருள் குறித்து முதல் பருவத்துக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி ஜூன் 9 முதல் 13-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதையடுத்து ஒன்றிய அளவில் ஆசிரியர்களை குழுக்களாக பிரித்து பயிற்சி வழங்க வேண்டும். அதேநேரம், பயிற்சி நாளில் அந்தந்த பள்ளிகளில் மாற்று ஆசிரியர்கள் மூலம் வகுப்பை தொடர்வதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான செலவீனத்தை ஆண்டு பராமரிப்பு நிதியில் இருந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: சங்காதரேசுவரர் கோயில் தேரோட்டம்: புரசைவாக்கம் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..!!