மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காண வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க திமுக, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னதாக தேர்தல் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து, மாவட்ட வாரியாக கருத்துகளை கேட்டது. தொடர்ந்து 8 மண்டலங்களாக பிரித்து, மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதுடன், 234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் முதல்வர் அறிவித்த உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக நேற்று மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தொகுதி பார்வையாளர்களுடனான கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் அனைவரது கருத்துகளையும் கேட்டு, தேர்தல் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கினார். அப்போது, ‘பொதுமக்கள், வாக்காளர்கள் கூறும் குறைகளை கேட்டு பொறுமையுடன் பதிலளிக்க வேண்டும். திமுக அரசின் திட்டங்களை எடுத்துரைத்து, 30 சதவீதம் வாக்காளர்களை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்கினார்.
கூட்டம் தெடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ஆக்கப்பூர்வ ஆலோசனைகளுடன் நடந்தேறியது மாவட்ட செயலாளர்கள் கூட்டம். 2026 தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்கும் விதமாக மக்களைச் சந்திக்க புறப்படும் கழகத் தோழர்களின் ஒவ்வொரு நகர்வும் வெற்றி பெற தலைமைத் தொண்டனாக வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
Read More: இனி 30 நாட்களுக்குள் பட்டா… தமிழக அரசுக்கு முன்னாள் நிதியமைச்சர் பாராட்டு…!