வேலையின் அழுத்தம், மேலாளரின் தனிப்பட்ட விமர்சனங்கள் மற்றும் மனிதநேயமற்ற அணுகுமுறை இவை அனைத்தும் ஒரு இளம் இந்திய தொழில்நுட்ப வல்லுநரை, வேறு எந்த வேலை வாய்ப்பும் இல்லாத நிலையில், தனது வேலையை ராஜினாமா செய்யும் கட்டாய நிலைக்குத் தள்ளியது.
2022-ஆம் ஆண்டு, ரூ.8.5 லட்சம் வருட சம்பளத்துடன், அவர் ஒரு முன்னணி ஐடி நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஆரம்பத்திலிருந்தே பணிச்சூழல் சோகம் நிறைந்ததாகவே இருந்தது என அவர் கூறுகிறார். திறமைக்கு மதிப்பளிக்கும் பணி சூழல் கிடையாது. பதிலுக்கு, மேலாளர்களை மகிழ்விப்பதே முக்கியமாகக் கருதப்படும் நிலையில், வேலை என்பது அலுவலக அரசியலின் பலிப்பாகவே மாறியிருந்தது.
பலரும் அவரது உழைப்பையும் செயல்திறனையும் பாராட்டினாலும், ஒரு முக்கிய மேலாளர் மட்டும் அவரது முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்ததாக அவர் பகிர்ந்தார். 2024 ஏப்ரலில் ராஜினாமா செய்ய முயன்ற போது, “55% சம்பள உயர்வு” என்ற வாய்மொழி வாக்குறுதியுடன் நிறுவனமே அவரைத் தங்க வைத்தது.
2024 டிசம்பரில் நிச்சயதார்த்தம், 2025 பிப்ரவரியில் திருமணம், அதற்குள் ஏப்ரலில் தந்தையின் துயரமான இழப்பு இவை போன்ற ஆழமான வாழ்க்கை மாற்றங்களுக்கிடையிலும் அவர் தனது பணியில் கவனம் செலுத்தினார். ஆனால் அந்த நேரத்தில் கூட அவரது மேலாளர் காட்டிய மரியாதையின்மை அவரை மன ரீதியாக துன்புறுத்தியது.
“நீங்கள் திருமணத்திற்கு முன்பே ராஜினாமா செய்திருக்க வேண்டும். உங்கள் திருமணம் வேலையை எவ்வளவு தாமதப்படுத்தியது தெரியுமா? உங்கள் தந்தையின் இழப்பு என் வேலை திட்டங்களைக் கெடுத்துவிட்டன,” என நேரடி மதிப்பீட்டுக் கூட்டத்தில் கூறியதாக அவர் தனது சமூக ஊடகப் பதிவில் வெளியிட்டார்.
2025 ஜூன் 3-ஆம் தேதி, வேறு வேலை வாய்ப்பு எதுவும் இல்லாத நிலையில், அவர் நிறுவத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறினார். ரெடிட் வலைதளத்தில் அவரது பதிவு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலர் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். “நிறுவனத்தின் பெயரை வெளிப்படையாக சொல்லுங்கள்” என சிலர் கண்டனம் தெரிவித்தனர்.
Read more: ரூ.500 கோடியில் தமிழக அரசு போட்ட ஒப்பந்தம்.. 2 ஆண்டில் 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு…!