தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் மற்றும் அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயண வசதி உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு நாட்கள் பரிசோதனைக்குப் பிறகு இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,“ஆண்டுக்கு இருமுறை முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். கடந்த 8 மாதங்களாக கடுமையான பணிச்சுமை காரணமாக அதை செய்ய முடியவில்லை.
அதனால் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கி பரிசோதனை செய்தேன். தற்போது நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்,” என்றார். அமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் எனக் கூறப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது ஏன் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “நான் சிகிச்சை பெற்றது என்னுடைய உறவினரின் மருத்துவமனை. எனவே அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. எப்போதும் அங்கேதான் சிகிச்சை பெறுவேன்,” என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் மற்றும் “விடியல் பயணம்” திட்ட விரிவாக்கம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், “முந்தைய ஆட்சியில் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்பட்டன என்பது அனைவருக்கும் தெரியும். நிதிநிலையைப் பொறுத்து ஒவ்வொரு திட்டமும் படிப்படியாக நிறைவேற்றப்படும். இதுகுறித்து இறுதி முடிவை முதல்வர் விஜய் எடுப்பார்,” என்றார்.



