நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, அண்மைக்காலமாக இந்தியாவின் ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அவரின் இந்த அணுகுமுறை, நாட்டின் பாதுகாப்பிற்காக உயிரை பணயம் வைத்து போராடும் வீரர்களின் மன உறுதியை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியில் பிரிவினையையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
பாதுகாப்பு படைகளின் நேர்மைக்கு கேள்வி: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டை பாதுகாக்க இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் அயராது செயல்பட்டு வருகின்றன. ஆனால் ராகுல் காந்தி பல சந்தர்ப்பங்களில் இந்தியாவின் பாதுகாப்புப் படைகளின் நேர்மை மற்றும் நோக்கங்களை கேள்விக்குட்படுத்தியுள்ளார். தேசத்தின் பாதுகாப்பு மிக முக்கியமானதாக அமைந்துள்ள தற்போதைய சூழலில், ராணுவ நடவடிக்கைகளை அரசியல் கோணத்தில் விமர்சிப்பது, ராணுவ வீரர்களின் நடவடிக்கையை பாதிக்கக்கூடியதாகவும், மக்களின் மனநிலையை பிளவுபடுத்தக்கூடியதாகவும் உள்ளதாக பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
சமீபத்தில் போபாலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசுகையில், கடந்த மாதம் பாகிஸ்தானுடன் நடந்த ராணுவ மோதலின்போது பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து விட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் பேசிய பிறகு மோடி சரணடைந்தார் என்றும், “நரேந்தர், சரண்டர்” என்று டிரம்ப் கூறியதற்கு “சரி” என்று மோடி பதிலளித்ததாகவும் ராகுல் காந்தி கிண்டலாக கூறினார்.
பாஜக அரசின் கொள்கையை தொடர்ந்து விமர்சித்து வரும் காங்கிரஸ் கட்சி, சமீபத்தில் தனது Xபக்கத்தில் வெளியிட்ட கார்ட்டூன் ஓவியம் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அந்த கார்ட்டூனில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தொலைபேசியில் “நரேந்தர், சரண்டர்!” என கடும் உத்தரவை கொடுப்பது போலவும், பிரதமர் மோடி அதற்கு “சரி” என மரியாதையுடன் பதிலளிப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது.
இதுபோன்ற கருத்துக்களை ராகுல் காந்தி தெரிவிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் முக்கியமான தருணங்களில் நமது ராணுவத்தின் மீது அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பாலகோட் விமானத் தாக்குதல் மற்றும் உரி தாக்குதலுக்குப் பிறகும் கூட, அவர் “வீடியோ ஆதாரம்” கேட்டார். இதன் மூலம் இந்திய ஆயுதப் படைகளின் மன உறுதியைக் குறைத்தார்.
சீனாவுடனான கல்வான் பள்ளத்தாக்கு மோதலின்போது, வீரர்களின் தியாகத்தை போற்றுவதற்கு பதிலாக, அந்த துயரத்தை அரசியலாக்கி, அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் குறை கூறினார். பாகிஸ்தானின் பயங்கரவாத உள்கட்டமைப்பை இந்தியாவின் தாக்குதல்கள் அழித்துள்ளன. இதை நடுநிலையாளர்களே ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ராகுல் காந்தி இந்த தாக்குதல்களை அங்கீகரிக்க மறுக்கிறார். இதன் மூலம் காங்கிரஸின் அரசியல் ஆதாயங்களுக்காக தேசிய பாதுகாப்பை அடகு வைக்க பார்க்கிறதோ என்ற கேள்வி எழுகிறது.
மற்ற நாடுகளை போல் ஒற்றுமை இல்லை: போர் நடக்கும் நாடுகளில், அரசியல் கட்சிகள் தங்கள் ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக ஒன்றிணைகின்றன. ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் ஆகியவற்றில் அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்துடன் காணப்பட்டது. இந்தியாவுக்கும் இதே ஒற்றுமை தேவை. ஆனால் ராகுல் காந்தி இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டின் மன உறுதியை உடைக்கும் வகையில் செயல்படுகிறார்.
தேசபக்தி என்பது ஆதரவு: தேசபக்தி என்பது ஆதரவு தருவது, சந்தேகம் கொள்வது அல்ல. இந்தியா ஒரு வளர்ந்து வரும் சக்தி. நமது ராணுவம் உலகளவில் மரியாதையைப் பெற்றுள்ளது. நமது வீரர்கள் எல்லைகளைப் பாதுகாக்க ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறார்கள். எந்த இழப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமற்றது. வெற்றிக்கான “ஆதாரம்” கேட்பது அவர்களின் தியாகங்களை குறைத்து மதிப்பிடுவது போல ஆகிவிடும்.
ராகுல் காந்தியின் இந்த மாதிரியான கருத்துக்கள் இந்தியர்களின் மன உறுதியை குறைத்து பாகிஸ்தான் போன்ற எதிரிகளுக்கு தைரியத்தை அளிக்கும். இந்தியாவின் பலம் ஒற்றுமையில் உள்ளது, பிளவுபடுத்துவதில் இல்லை. முக்கியமான தருணங்களில், அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் நாட்டின் உணர்வை பிரதிபலிக்க வேண்டும். மோடி தலைமையிலான அரசாங்கம் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் எப்போதும் தெளிவுடனும், வலிமையுடனும் செயல்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளும் இந்த தருணத்தில் இந்தியாவுக்கு ஆதரவாகவும், தேசியப் பெருமையுடனும் செயல்பட வேண்டிய நேரம் இது. ஒற்றுமையே இந்தியாவின் பலம். இந்த முக்கியமான தருணத்தில், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டின் நலனுக்காகப் பாடுபட வேண்டும்.