இஸ்ரேலில் உள்ள மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி இனியும் இருக்கக்கூடாது என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இன்று கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
இஸ்ரேல் – ஈரான் மோதல் 7வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் இராணுவ உள்கட்டமைப்பு, மூத்த தளபதிகள் மற்றும் அணுசக்தி நிபுணர்களை குறிவைத்து இஸ்ரேலின் எதிர்பாராத வான்வழித் தாக்குதல் நடத்தியதால் தற்போது இந்த மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. அன்று முதல், ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இஸ்ரேலிய எல்லைக்குள் ஏவியுள்ளது.
இஸ்ரேலின் பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றில் பலவற்றை இடைமறித்திருந்தாலும், பல ஏவுகணைகள் இஸ்ரேலில் கடும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவதால் அங்கு போர் பதற்றம் நிலவுகிறது. இன்று ஈரானின் அரக் கன நீர் அணு உலை மீது இஸ்ரேல் புதிய தாக்குதல்களை நடத்தியது.. இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் தெற்கு நகரமான பீர்ஷெபாவில் உள்ள சொரோகா மருத்துவமனை மீது ஈரான் ஒரு பெரிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.
அதிகாலையில் நடந்த சரமாரித் தாக்குதலுக்குப் பிறகு மருத்துவமனை தீப்பிடித்தது. இதில் சுமார் 50 பேர் காயமடைந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது. டெல் அவிவ் அருகே உள்ள நகரங்களில் கூடுதல் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இதனால் கோபமடைந்த இஸ்ரேல் ஈரான் மீதான தாக்குதல் மேலும் தீவிரமடையும் என்று எச்சரித்துள்ளது. டெல் அவிவ் அருகே உள்ள ஹோலோனில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கமேனி, “இஸ்ரேல் அழிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக கமேனி வெளிப்படையாக அறிவிக்கிறார்.- மருத்துவமனைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அவர் தனிப்பட்ட முறையில் உத்தரவிடுகிறார். இஸ்ரேல் அரசின் அழிவை அவர் ஒரு இலக்காகக் கருதுகிறார். அத்தகைய மனிதர் இனி இருக்க அனுமதிக்க முடியாது” என்று கூறினார்.
இதற்கிடையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் மருத்துவமனை தாக்குதலுக்கு கடுமையாக பதிலளித்தார். இந்த தாக்குதலுக்கு, ஈரான் பெரும் விலை கொடுக்க நேரிடும் என்று எச்சரித்தார். தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்ட அவர் “இன்று காலை, ஈரானின் பயங்கரவாத சர்வாதிகாரிகள் சொரோகா மருத்துவமனை மீதும், நாட்டின் மையத்தில் உள்ள பொதுமக்கள் மீதும் ஏவுகணைகளை வீசினர். தெஹ்ரானில் உள்ள கொடுங்கோலர்கள் இதற்கு பெரும் விலை கொடுக்க நேரிடமும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
Read More : ஈரானை தாக்கும் திட்டங்களுக்கு ட்ரம்ப் ரகசிய ஒப்புதல்.. ஆனா இதுக்காக வெயிட் பண்றாராம்.. பரபரப்பு தகவல்..