ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைக் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினார்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை, அமெரிக்க ராணுவம் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan), மற்றும் நடான்ஸ் (Natanz) ஆகிய முக்கிய அணுசக்தி உற்பத்தி தளங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல்கள், சர்வதேச சட்டங்களை மீறியவை எனக் குற்றம்சாட்டி, ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தற்போதைய நிலைமை குறித்து ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனிடம் தொலைபேசியில் உரையாடினேன். சமீபத்திய மோதல்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தேன். பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கும், பதற்றத்தை உடனடியாகக் குறைப்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினேன்.”
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே தீவிரமடைந்துள்ள மோதல் சூழ்நிலையில், இந்த தாக்குதல் பிராந்திய மற்றும் பன்னாட்டு உறவுகளில் புதிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்தியா தொடர்ந்து நடுநிலை நாடாக இருந்து, அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஊக்கமளித்து வரும் நிலையில், பிரதமரின் இந்த நடவடிக்கை கவனம் ஈர்த்துள்ளது.
Read more: களைகட்டும் மதுரை.. கோலாகலமாக தொடங்கியது முருகன் மாநாடு.. 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு..!!