இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் செகந்திராபாத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், நாடு முழுவதும் உள்ள மக்களைத் தங்கத்தை வாங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார். குறிப்பாக, திருமண நிகழ்வுகளின்போது, அடுத்த ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு அவர் மக்களுக்கு அறிவுறுத்தினார். இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதோ அல்லது முழுமையாக நிறுத்துவதோ ஒரு தேசபக்திச் செயல் என்று மோடி குறிப்பிட்டார்.
இதன் விளைவாக, இந்திய அரசு கோவில்களில் உள்ள தங்கத்தை பணமாக மாற்றப்போவதாகவும், மக்களின் கையில் உள்ள தங்கத்தை அரசு கணக்கெடுத்து வருவதாகவும் சமூக ஊடகங்களில் சில தரப்பினரால் பரவலான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இச்செய்திகள் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதால், மத்திய நிதியமைச்சகம் இதில் தலையிட்டு, இத்தகைய ஊகங்கள் அனைத்தையும் முழுமையாக மறுத்துத் தெளிவுபடுத்தியது.
கோவில் அறக்கட்டளைகளிடமிருந்து தங்கத்தை அரசு கையகப்படுத்தப்போவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை என்று நிதியமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், கோவில்களின் கோபுரங்கள், வாயில்கள் அல்லது பிற கட்டுமானங்களில் உள்ள தங்கம் நாட்டின் ‘மூலோபாயக் கையிருப்பு’ (Strategic Reserves) என்பதற்கான அடையாளம் என்று பரவும் செய்திகளிலும் எவ்வித உண்மையும் இல்லை என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. இத்தகைய தவறான தகவல்கள் மக்களைத் திசைதிருப்புவது மட்டுமல்லாமல், தேவையற்ற பீதியையும் ஏற்படுத்துவதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியக் குடும்பங்கள் மற்றும் கோவில்களில் உள்ள தங்கத்தின் மதிப்பு மிக அதிகமாகும். ஒரு மதிப்பீட்டின்படி, இந்திய அரசும் இந்திய ரிசர்வ் வங்கியும் அதிகாரப்பூர்வமாக சுமார் 880 டன் தங்கத்தைக் கையிருப்பில் வைத்துள்ளன. மேலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் இல்லாவிட்டாலும், நாட்டின் பல்வேறு கோவில்களில் சுமார் 3,000 முதல் 4,000 டன் வரை தங்கம் இருக்கலாம் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். இது, பல வளர்ந்த நாடுகளின் மத்திய வங்கிகள் வைத்துள்ள தங்கக் கையிருப்பை விட அதிகமானதாகும்.
கொள்கை முடிவுகள் அல்லது அரசுத் திட்டங்கள் தொடர்பான தகவல்களை, அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள், பத்திரிக்கை வெளியீடுகள் மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த தளங்கள் வாயிலாக மட்டுமே பெற்றுக்கொள்ளுமாறு நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வமற்ற மூலங்களிலிருந்து வரும் தகவல்களை நம்பவோ அல்லது பிறருக்குப் பரப்பவோ கூடாது என்று அமைச்சகம் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மறுபுறம், தங்கம் வாங்குவதற்கு அரசு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை. மத நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பாக எவ்விதமான பாதகமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை. சரிபார்க்கப்படாத செய்திகளைப் பிறருக்குப் பகிர்வதற்கு முன்பு, அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்வது பொறுப்புள்ள குடிமக்களாகிய நம் அனைவரின் கடமையாகும்..!
Read More : ஏடிஎம் அட்டைகள் குறித்த ரிசர்வ் வங்கியின் ஷாக் அறிக்கை..! மக்கள் இந்த அளவு மாறிவிட்டார்களா..?



