நாடு முழுவதும் இரயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா விளக்கம் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் பொது மக்கள் அதிகமாக ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். நெடுந்தூரத்தையும் குறைந்த நேரத்தில் கடந்துவிடுவதோடு, பேருந்து கட்டணத்தை விட மிக மிக குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதுதான் இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. மேலும், ரயில்களின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.
இந்த சூழலில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் ரயில்வே கட்டணத்தை உயர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஏசி அல்லாத ரயில்களுக்கும், விரைவு ரயில்களுக்கும் கிலோமீட்டருக்கு ஒரு பைசாவும், ஏசி வசதி கொண்ட விரைவு ரயில்களுக்கு கிலோமீட்டருக்கு இரண்டு பைசாவும் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியானது. மேலும், இந்தக் கட்டண உயர்வு வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் நாடு முழுவதும் ரயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா விளக்கம் அளித்துள்ளார். இத்திட்டத்திற்கான இறுதி முடிவை பிரதமரும் ரயில்வே அமைச்சகமும் இணைந்து எடுப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த பெட்டி தொழிற்சாலையில் (ICF) செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இதுவரை, 88 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. தற்போது, ஒன்பது வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், டில்லிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சில தொழில்நுட்ப மாற்றங்களோடு, சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இரண்டாவது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், ஆக., 15லும், மூன்றாவது ரயில் செப்., 15லும் துவக்கப்படும். அதுபோல், தானியங்கி கதவுகளுடன் இயங்கும், ‘ஏசி’ அல்லாத இரண்டு மின்சார ரயில்கள், டிசம்பருக்குள் தயாரிக்கப்படும். இதுவரை ஆறு அம்ரித் பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. ஐ.சி.எப்., மற்றும் ஆர்.சி.எப்., ஆலையில், 50க்கும் மேற்பட்ட அம்ரித் பாரத் ரயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை – டில்லி இடையே இயக்கப்படும், தமிழ்நாடு மற்றும் ஜி.டி., விரைவு ரயில்களுக்கு பதில் அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படும். ஹைட்ரஜன் ரயில் தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த ரயில் சோதனை ஓட்டம், 15 நாட்களில் நடத்தப்படும். பல்வேறு கட்ட சோதனைகள் நடத்திய பின், ஹரியானா மாநிலம், ஜிந்த் – சோனிபெட் இடையே, இந்த ஆண்டின் இறுதியில் இயக்கப்படும். பிரதமர் மோடி ஆட்சியில், ரயில்வே துறை பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது என்றார்.
Read more: ரயில் கட்டண உயர்வா..? நாடகம் போடும் முதல்வர் ஸ்டாலின்… அம்பலப்படுத்திய அண்ணாமலை…!