காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாராமன் மரணத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்..
சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ராஜாராமன்.. இவர் ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.. இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி இரவு 8 மணியளவில் ராஜாராமன் தனது நண்பர்களுடன் எழும்பூரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்தார்.. அப்போது அவரும் அவருடன் வந்திருந்த ராக்கி, அய்யப்பன் ஆகியோரும் மதுபோதையில் இருந்துள்ளனர்.
ராஜாராமன் கிளம்பிய போது, அவருக்கும் ராக்கி, அய்யப்பனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜாராமனை அவர்கள் கடுமையாக தாக்கி கீழே தள்ளிவிட்டனர்.. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ராஜராமனுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. இதைத்தொடர்ந்து எழும்பூர் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
இந்த நிலையில், ராஜாராமன் மரணத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கடந்த 18 ஆம் தேதியன்று, மது போதையிலிருந்த கும்பலால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. ராஜாராமன், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. தமிழகத்தில், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பில்லாத கையாலாகாத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒரு காவல் அதிகாரியைத் தாக்கி ஒரு வாரம் கடந்தும், இந்தக் குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளிகள், இன்னும் கைது செய்யப்படவில்லை என்றால், திமுக ஆட்சியில் அரசு இயந்திரம் எவ்வளவு தூரம் செயலிழந்து கிடக்கிறது என்பதை உணர முடியும். கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள், போதைப்பொருள்கள் கடத்துபவர்கள், கந்து வட்டிக்காரர்கள், கிட்னி திருடுபவர்கள், பாலியல் குற்றவாளிகள் என, திமுக ஆட்சி நடத்துவதே சமூக விரோதிகளுக்காகத்தான்.
4 ஆண்டு ஆட்சியில், தமிழகத்தை 50 வருடம் பின்னோக்கிக் கொண்டு சென்றிருப்பதுதான் திமுகவின் சாதனை. உடனடியாக, துணை ஆய்வாளர் ராஜாராமன் அவர்கள் மரணத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மேலும், தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத நிலையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள், இதற்கு என்ன விளக்கமளிக்கப் போகிறார் என்று எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.